Sunday 21 April 2024

"ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருடம் லட்ச ரூபாய் தருவோம்" - பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!


 

          -- ஆர். வி. ஆர்

 

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி - இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.


"மத்தியில் அமையும் காங்கிரஸ் அரசு, இந்தியாவின் ஒவ்வொரு ஏழ்மைக் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு வருடம் தோறும் அவரது வங்கிக் கணக்கில் லட்ச ரூபாய் செலுத்தும். மாதம் அது கிட்டதட்ட எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகிறது.”

 

“நீங்கள் ஒரு வேலை பார்க்கலாம்.  இருந்தாலும் உங்கள் குடும்பம் ஏழ்மைக் குடும்பமாக இருந்தால், உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்ற வகையில் வருடம் தோறும் லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் நீங்கள் எந்த நாள் வரை இருக்கிறீர்களோ, அந்த நாள் வரை உங்கள் வங்கிக் கணக்கில் மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய், அதாவது வருடத்திற்கு லட்ச ரூபாய், டாண் டாணென்று வந்து கொண்டிருக்கும். இப்படியாக ஒரே வீச்சில் நாங்கள் நாட்டின் வறுமையை ஒழித்துவிடுவோம்."

 

சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஒரு பெரிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த வார்த்தைகளை ஹிந்தியில் பேசினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. முன்னதாகக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. அதில் இந்த ‘ஒரு லட்ச ரூபாய்’ வாக்குறுதியும் சொல்லப்பட்டிருந்தது.


ராகுல் காந்தியைத் தவிர, இந்த வாக்குறுதியை இப்படித் தம்பட்டமாக, தடபுடலாக, ஜிகினா அலங்காரங்கள் செய்து, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சொல்லக் காணோம். இந்த வாக்குறுதியை ராகுல் விளக்கிய விதத்தில் உள்ள பைத்தியக் காரத்தனமும் அரசியல் பிராடும் ராகுல் காந்திக்கு விசேஷமாக  உரித்தானவை.

 

ஒரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்போது அதிகரிக்கும்? அவர்களின் வருமானம் நிஜத்தில் எப்போது கூடும்அவர்களின் பொருளாதார நிலை எப்போது உயரும்? ஒரு நாடு சிறந்த பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்தி, நாட்டில் தொழில் பெருகி உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் தவிர – அரசு மட்டத்தில் லஞ்ச ஊழலைக் கட்டுப் படுத்தி, பொதுச் சொத்து விரயம் ஆவதையும் தடுத்தால் ஒழிய – மக்களுக்கு அந்தப் பயன்கள் கிடைக்காது

 

ராஜஸ்தானில் பேசிவிட்டு மறுநாள் இன்னொரு மாநிலத்தில் மேடை ஏறிய ராகுல் காந்தி, இந்தியாவில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் 83 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்று சொன்னார். அப்படியானால், திருமண வயதை அடைந்தவுடன், ஏதோ வேலை இருக்கிறதோ இல்லையோ, எல்லா ஆண்களும் டும்டும் செய்து கொள்ள வேண்டியதுதான், புதுப்புது குடும்பங்களுக்கு மாதம் சுமார் 8,500 ரூபாய் கிடைக்கும் என்கிறார் ராகுல் காந்தி.  இந்த வாக்குறுதி அரசைப் போண்டி ஆக்குவது மட்டுமல்ல, வேறு வகைகளிலும் விபரீதம் செய்யும்.

 

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த வருடங்கள் கூட்டாக 38.  ஒரு பிரதமரின் சிண்டைப் பிடித்து அவர் கையைக் கட்டி மத்தியில் சோனியா காந்தி அதிகாரம் செலுத்திய வருடங்கள் 10. ஆக மொத்தம் 48 ஆண்டுகள் நேரு குடும்பம் மத்திய அரசில் கோலோச்சியது. ராகுல் காந்தி சொல்லும் மிக எளிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை சிந்திக்காத மண்டூகங்களா அவரது அம்மா, அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா?

 

இந்த லட்ச ரூபாய்ப் பணத்தை உத்தேசமாக எத்தனை குடும்பங்களுக்கு மத்திய அரசு இனாமாக அளிக்க வேண்டி இருக்கும், எத்தனை வருடங்கள் தரவேண்டி இருக்கும், அதற்கான ஆண்டுச் செலவு எவ்வளவு, அந்தப் பணத்திற்கான மூல ஆதாரம் என்ன, என்று ஒரு விவரமும் காங்கிரஸ் கட்சியோ ராகுல் காந்தியோ தரவில்லை.

 

உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் தவிக்கின்றன. அவை எல்லாம் தங்கள் குடிமக்களுக்கு ஒரு லட்சம், ரண்டு லட்சம் என்று ஒவ்வொரு வருடமும் பணம் கொடுத்து வந்தால் உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஏழ்மை விரட்டி அடிக்கப் படுமே?

 

கடந்த 45 வருடங்களாகச் சீனா அந்நிய முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, பொதுக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது. அந்த நாடு ஏன் ராகுல் காந்தி பார்மூலவைப் பின்பற்றாமல் திடமான கடின வழியில் முன்னேறுகிறது?

 

எப்படிப் பார்த்தாலும் ராகுல் பேசியது குப்பை என்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும். இது நிஜத்தில் நடக்காது என்று அவர்களும் நினைப்பார்கள். இருந்தாலும், தலைக்கனம் ஏறிய ஒரு பணக்காரன் ஒரு பிச்சைக்காரனிடம், “அடுத்த மாதம் உன் திருவோட்டில் ஆயிரம் ரூபாய் போடுகிறேன்” என்று சொன்னால், அதை நம்ப முடிக்கிறதோ இல்லையோ அதைத் தேமே என்று கேட்டுப் போவான் அந்தப் பிச்சைக்காரன். அப்படித்தான் ராகுல் பேச்சைக் கேட்ட சாதாரண மக்கள் இருப்பார்கள். அந்த நிலையில்தான் அவர்களை நீடித்து வைத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள். 

 

ராகுலின் ராஜஸ்தான் பேச்சு டுபாக்கூர் பேச்சு என்பது எல்லா காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். அவர்களின் முதல் பெரிய பிரச்சனை ராகுல் காந்தியும், பிள்ளைப் பாசம் மிக்க சோனியா காந்தியும்தான்.

 

திறமையும் தேசப் பற்றும் சுய மரியாதையும் உள்ள இளைஞர்கள் எவரும் காங்கிரஸுக்கு வரமுடியாமல், கட்சிக்குள் வளர முடியாமல், ஒதுங்கிப் போகிறார்கள். அதற்குக் காரணம், இந்த இருவரின் ராஜ தோரணை, எதேச்சாதிகாரம், மற்றும் தீராத பதவி மோகம். இந்த இருவருக்குச் சாமரம் வீசி, சலாம் போட்டு, கைகளும் தட்டி, தங்களின் ஆதாயத்தைக் கவனித்துச் சுகிக்கிறார்கள் கட்சியின் அடுத்த கட்ட சீனியர் தலைவர்கள்.  

 

சரி, காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை அந்தக் கட்சி பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் ராகுல் காந்தியின் ராஜஸ்தான் பேச்சின் போது அவர் நெஞ்சோடு நெஞ்சாக வைத்திருந்த துருப்புச்சீட்டைக் கவனித்தீர்களா?

 

ராகுல் காந்தி அறிவித்த லட்ச ரூபாய் வாக்குறுதியை, மத்தியில் அமையும் ‘காங்கிரஸ்’ அரசு நிறைவேற்றும் என்றார் அவர். ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் வென்று மத்தியில் ‘காங்கிரஸ்’ அரசை நிச்சயம் அமைக்கப் போவதில்லை. அந்தக் கட்சி போட்டியிடப் போவதே மொத்தம் சுமார் 330 இடங்கள்தான் என்றும் செய்திகள் வருகின்றன.

 

சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ. பி ஆகிய மூன்று மாநிலங்களில் நாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொண்டோம். காரணம், நாங்கள் வலுவான ‘இண்டி’ கூட்டணி அமைக்க விரும்பினோம். காங்கிரஸும் இண்டி கூட்டணியும் மக்களின் தெளிவான தீர்ப்பைப் பெறும்”  என்று, மத்தியில் அமையப் போகும் ஆட்சி இண்டி கூட்டணியின் ஆட்சிதான், காங்கிரஸ் ஆட்சி அல்ல, என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டத்தை அவர் அறிவித்துவிட்டார்.

 

காங்கிரஸ் கட்சியே தனது ஆட்சி அமையாது என்று அறிந்து, இண்டி கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்பட்டுக் காத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, “காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருஷா வருஷம் லட்ச ரூபாயைக் காங்கிரஸ் அரசு செலுத்தும். இவ்விதமாக வறுமையை ஒழிப்போம்” என்று ஓட்டுக்காகப் பொது மக்களிடம் ராகுல்  காந்தி பேசினால் என்ன அர்த்தம்? பிள்ளை பிடிக்க அலைபவன், கிடைக்கிற சிறுவர்களிடம் பேசும் ஆசை வாரத்தைதானே இது?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

  

 


Tuesday 16 April 2024

‘இண்டி’ கூட்டணியில் ஏன் பிரதமர் வேட்பாளர் கிடையாது? ஸ்டாலின் அற்புத விளக்கம்!

  

          -- ஆர். வி. ஆர் 

 

நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. “யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தலின் குறிக்கோள் – யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை அல்ல” என்று ஒருவர் பிதற்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  சிரிப்பீர்கள். அவரே, தமிழக முதல்வர்  ஸ்டாலினாக இருந்தால்?  சற்றுப் பெரிதாக சிரிப்பீர்கள்.


சமீபத்தில் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில்தான் ஸ்டாலின் அப்படிப் பேசி இருந்தார்.

 

ஒரு பதவிக்குப் பலர் ஆசைப்படும்போது, அதற்காக அவர்கள் போட்டியிடும்போது, போட்டியாளர்களில் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்பதை சம்பத்தப்பட்டவர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்யும் வழிமுறை தேர்தல். இதை ஆங்கிலத்தில் elect (எலெக்ட்) செய்வது என்றும், இந்த வழிமுறையை  election (எலெக்ஷன்) என்றும் சொல்கிறோம்.

 

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்ற ஒரு அணியையோ அல்லது கட்சியையோ  அரசு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தும் முறை இருக்கிறது, அந்தப் பெரும்பான்மை தேர்தல் மூலமாகத் தீர்வு செய்யப்படுகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.

 

மக்கள் ஓட்டுப் போட்டு, தேர்தல் மூலம் ஒரு பதவிக்கு ஓருவர் தேர்வானால் – கவுன்சிலராகவோ, சட்டசபை உறுப்பினாராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினாராகவோ – அதன் மறுபக்கமாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றவர்கள் தேர்வாகவில்லை என்று ஆகிவிடுகிறது. ஆனால் தேர்தலின் நோக்கம் என்ன? யார் ஒருவர் தேர்வாகிப் பதவிக்கு வந்து செய்யலாற்ற வேண்டும் என்பதா? அல்லது ஸ்டாலின் சொல்ல வருவது போல், எந்தப் போட்டியாளர் தோற்றுப் போகவேண்டும் என்று முதலில் தீர்மானிக்கப் பட்டு, எஞ்சியவர்களில் ஒருவர் – அந்த மனிதர் எப்படியானவராக இருந்தாலும் – ஜம்மென்று பதவி நாற்காலியில் அமர்ந்து அவருக்குத் தோன்றுகிற, அவரால் முடிகிற, வேலைகளைப் பார்க்கட்டும் என்பதா?

 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்னும் புரியவில்லையா? சரி, அவருக்காகத் தேர்தலின் நோக்கத்தை இப்படி விளக்கலாம்.    

 

தேர்தல் என்பது ஒரு வகையில் ஓட்டப் பந்தயம் மாதிரி. ஓட்டப் பந்தயத்திற்கு ஒரு நடுவர் உண்டு. அவர் என்ன செய்வார்? ஓடும் விளையாட்டு வீரர்களில் யார் முதலில் எல்லைக் கோட்டைக் கடந்தார் என்று பார்த்து, எந்த விளையாட்டு வீரர் ஜெயித்தார், இரண்டாவதாக, மூன்றாவதாக வந்த வீரர்கள் யார் யார் என்றும் பார்த்து, போட்டியின் முடிவுகளை நடுவர் அறிவிப்பார்.  

 

எந்த ஓட்டப் பந்தயமும் நடப்பது எதற்கு? தோற்பவர் யார், அதுவும் மிகக் கடைசியில் வருபவர் யார், என்று தீர்மானித்து அதை அனைவரும் தெரிந்துகொள்ளவா? அல்லது, எந்த விளையாட்டு வீரர் முதலாவதாக வரப் போகிறார் என்று பார்த்து அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்து கவுரவிப்பதா? 

 

முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாதா? அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் காரண காரியமாகத் தனது பேட்டியில் இப்போது பிதற்றி இருக்கிறார். இதே பிதற்றலை அவரது ‘இண்டி’ கூட்டணியின் மற்ற தலைவர்களும்  வேறு வழியில்லாமல் பல சமயங்களில் பேசி இருக்கிறார்கள்.

 

நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கும், பாஜக-வின் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார் என்பது நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு.  தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றிருக்கின்றன. மோடியை எதிர்த்து, பாஜக-வை வென்று, மத்தியில் தாங்கள் கூட்டாக ஆட்சி அமைக்க முடியும் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூட நம்பவில்லை.

 

திமுக, காங்கிரஸ் என்று ‘இண்டி’ கூட்டணியில் 28 கட்சிகளோ என்னவோ இருக்கின்றனவாம். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்தால், அதன் சிறந்த நடவடிக்கைகளால்,  பத்து வருடங்களாக எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. கஷ்டத்தையாவது தாங்கலாம், நஷ்டத்தைச் சொல்லவும் முடியவில்லை, நீண்ட காலம் தாங்கவும் முடியவில்லை. அவர்களின் நஷ்டம், அவர்களின் வேதனை, அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

 

தனித் தனியாக மோடியை எதிர்த்து மாளவில்லை என்பதால் கூட்டுசேர்ந்து, கசப்புடன் தமக்குள் தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டு, பாஜக-வை இந்தத் தேர்தலில் எதிர்க்கின்றன ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள். ஆனாலும், இந்தத் தேர்தலில் தங்கள் கூட்டணி ஜெயித்தால் தமக்குள் இன்ன கட்சியின் இன்ன தலைவர்தான் பிரதமராக வருவார் என்று இந்தக் கூட்டணிக் கட்சிகள் எதையும் தங்களுக்குள் ஏற்றுக் கொண்டு அறிவிக்கத் தயாரில்லை. காரணம்: தான் பிரதமராக வந்தால் தனக்கு அதிக லாபம், தனக்கு அதிகப் பயன், என்று அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். பிறகு அந்த மகா பெரிய அனுகூலத்தைக் கூட்டணியில் உள்ள மற்ற ஒரு கட்சியின் தலைவருக்கு முன்னதாகவே தாரை வார்த்துவிட அந்தக் கூட்டணித் தலைவர்கள் என்ன மக்குகளா? இப்போது விட்டுக் கொடுத்தால் அடுத்த சான்ஸ் கிடைக்குமா, எப்போது கிடைக்கும் என்று யாருக்குத் தெரியும்?

 

தமக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவிக்க முடியாததால், அதை நேரடியாகச் சொல்லவும் முடியாமல், ‘இந்தத் தேர்தல் நடப்பது, யார் ஜெயித்து வரக் கூடாது என்பதற்காக’ என்று அந்தக் கூட்டணித் தலைவர்கள் ஏதோ பிதற்றி மகிழ்கிறார்கள். அப்படிப் பேசி, தங்களின் தீராத பரஸ்பரப் போட்டியையும் பொறாமையையும் மறைக்க  முனைகிறார்கள். அதுதான் விஷயம்.

 

‘நமது கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை, நமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. நம்மில் எவரும் பிரதமர் ஆகப் போவதில்லை. நம்மில் எவருக்கும் கிடைக்க முடியாத வெற்றிப் பழத்திற்கு நாம் ஏன் முன்னதாக அடித்துக்கொள்ள வேண்டும்?’ என்ற நடைமுறை சிந்தனைதான், ஸ்டாலினும் மற்ற ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக ஒரே மாதிரிப் பிதற்றி வருவதின் காரணம்.  

 

ஏதோ இந்த வரையிலாவது ‘இண்டி’ கூட்டணித் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்று நினைத்து நாம் மீண்டும் ஒரு முறை சிரித்துக் கொள்ளலாம்.  வேறென்ன?

* * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

Wednesday 10 April 2024

அரசியலில் ஒரு அரைகுறை - ராகுல் காந்தி

 

-- ஆர். வி. ஆர்

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்கள் முன்பு டெல்லி ராம் லீலா மைதானத்தில் இப்படிப் பேசினார்: “நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தல், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய நினைக்கிறார்.”

 

ராகுல் மேலும் பேசியது: “இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெல்ல பாஜக கோஷம் போடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லாமல், ‘மேட்ச் பிக்சிங்’ செய்யாமல், எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம் தராமல், மீடியாவை விலைக்கு வாங்காமல், அவர்கள் 180 சீட்டுகள் கூட ஜெயிக்க முடியாது. பாஜக-வின் முயற்சிகள் வென்றால், நாட்டின் அரசியல் சட்டம் மாற்றப் படும், மக்களின் உரிமைகள் பறிக்கப் படும்.  பிறகு எங்கும் தீப்பற்றி எரியும்.”


தான் ஒரு அரைகுறை என்று இப்போதும் காண்பிக்கிறார் ராகுல் காந்தி. அவர் என்ன சொல்ல வருகிறார், பாருங்கள்.

 

லோக் சபாவுக்குத் தேர்தல் நடக்கும் சீட்டுகள் 543. மத்தியில் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்த பட்சம் 272 சீட்டுகள் வெல்ல வேண்டும். இந்தப் பின்னணியில் ராகுல் காந்தி சொல்ல வருவது: ‘இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 180 சீட்டுகளுக்கு மேல் கிடைத்து அவர்கள் ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியையும் எட்டிவிட்டால், அதற்கு நான்கு காரணங்கள்தான் இருக்க முடியும்.’

 

முதலாவதாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உபயோகிப்பது பாஜக தகிடுதத்தம் செய்வதற்கான வழி, அவர்கள் மோசடியாக 180 சீட்டுகளுக்கு மேல் வெல்வதற்கு அந்த எந்திரங்கள் காரணம் என்று ராகுல் ஆதாரமில்லாமல் பேச வருகிறார். அதோடு, அந்த முறைகேடு நடப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை என்றும் அபாண்டமாகச் சொல்ல வருகிறார் அவர்.    

 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், லோக் சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் ஒரு நிச்சய அம்சம் என்றாகி விட்டன. அப்படி என்றால் ராகுலின் பேச்சுக்கு என்ன அர்த்தம்?

 

வருகின்ற லோக் சபா தேர்தலில், அல்லது எந்த  சட்டசபைத் தேர்தலிலும், காங்கிரஸ் தோற்றால், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லாமல், காகித வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்திருந்தால் எங்கள் கட்சிதான், எங்கள் கூட்டணிதான், ஜெயித்திருக்கும்” என்று காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் சொல்லிக் கொண்டே இருப்பாரா? ஒரு தேர்தல் முடிவில் மக்கள் குரலை மதிக்கத் தெரியாமல், இப்படிப் பொதுவெளியில் வெட்கம் இல்லாமல் பேசும் ஒரு தலைவர் இந்தியாவில் வேறு யார் இருக்கிறார்?

 

ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ராகுல் காந்தி மாதிரி காங்கிரஸில் ஒரு வாரிசுத் தலைவர். ஆனால் அவரே கூட, “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் யாரும் தில்லுமுல்லு செய்ய முடியாது. மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள், அதிக ஓட்டுக்கள் பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயிக்கிறார்கள், அவ்வளவுதான்” என்று ஒரு ஒரு வீடியோ பேட்டியில் சொல்லிவிட்டார்.  இந்த அளவு நேர்மை கூட ராகுல் காந்தியிடம் இல்லை.  

 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடக்கிறது என்றால், வழக்கமான அமேதியை விட ஏன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் அதிக நம்பிக்கை வைக்கிறார்?  வயநாடு தொகுதி எந்திரங்களில் மட்டும் எவரும் மோசடி செய்ய முடியாது, ஆனால் மற்ற தொகுதி எந்திரங்களில் அது சாத்தியம் என்பதாலா? அல்லது, அமேதியில் கிடைக்காத பெரும்பான்மை வாக்குகள் ராகுல் காந்திக்கு நிஜமாகவே வயநாடில் கிடைகின்றன, மற்ற தொகுதிகளைப் போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கேயும் முடிவுகளைச் சரியாகக் காட்டுகின்றன என்பதாலா? ராகுல் காந்தி வயநாடில் ஜெயித்தால், மக்கள் கொடுத்த வெற்றி; பாஜக வேட்பாளர்கள் மற்ற தொகுதிகளில் ஜெயித்தால் அங்கு வாக்குப்பதிவு எந்திர மோசடியா?

 

ராகுல் காந்தி அடுத்துப் பேசியது, ‘மேட்ச் பிக்சிங்’ என்று ஒரு உளறலோ உளறல், ‘மீடியாவை விலைக்கு வாங்குதல்’ என்று ஒரு பேத்தல், ‘எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம்’ என்று ஒரு அர்த்தமற்ற கோழைத்தனம்.  

 

ராகுல் காந்தி பேசியது எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. பிறகு என்ன, 'மீடியாவை விலைக்கு வாங்குவது'?

 

எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மோடியை எதிர்க்க ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். பிறகு என்ன, 'எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம்'? எந்த ஒரு அரசியல் கட்சியும், தன்னை எதிர்க்கும் மற்ற கட்சியைச்  சட்டத்திற்கு உட்பட்டுக் கூடியவரை நெருக்குவதும், பலவீனமாக்குவதும் அரசியலில் நடப்பது, புரிந்துகொள்ளக் கூடியது. இருந்தாலும் மேடை ஏறி மூக்கால் அழுகிறார் ராகுல்.

 

தனது பேச்சில் இதோடு நிற்கவில்லை ராகுல் காந்தி. பாஜக இந்த லோக் சபா தேர்தலில் ஜெயித்தால், அப்போது அரசியல் சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளைப் பறித்துவிடுமாம் அந்தக் கட்சி. சரி, பாஜக எதற்காக அதைச் செய்யவேண்டும்? அரசியல் சட்டத்தை அப்படி மாற்றாமல் பாஜக தேர்தலில் ஜெயித்து ஏற்கனவே இரண்டு முறை மோடி பிரதமர் ஆனார். இப்போது மூன்றாவது முறையும் பாஜக ஜெயித்து மோடி பிரதமர் ஆகிவிட்டால், இனி எதற்காக பாஜக அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்? 


பாஜக நினைப்பதாக ராகுல் காந்தி பேசும் அந்த அரசியல் சட்ட மாற்றங்கள் என்ன, ஏது, எத்தகையவை என்று அவர் சொல்லவும் இல்லை. மங்கலாக ஒரு பூச்சாண்டியைக் காண்பிக்கிறார் ராகுல்,  அவ்வளவுதான்.  என்ன இருந்தாலும், எதுவானாலும், சுப்ரீம் கோர்ட்டின் மீதும் ராகுலுக்கு நம்பிக்கை இல்லையா?

 

கடைசியாக, எரிகின்ற தனது நப்பாசையை ராகுல் காந்தி எப்படியோ சொல்லிவிட்டார். அதாவது, இந்த முறை பாஜக ஜெயித்து அவர்கள் அரசியல் சட்டத்தையும் மாற்றிவிட்டால், பிறகு நாட்டில் எங்கும் தீப்பற்றி எரியுமாம்!

 

ராகுல் காந்தி அரசியலில் ஒரு அரைகுறையாக இருந்தால் போகட்டும். ஆனால் தேச விடுதலைக்காகத் தியாகம் செய்து இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்த பல தலைவர்கள் வளர்த்த காங்கிரஸ் கட்சி, இன்று இந்த அரைகுறையின் கையில் இருக்கிறது. இது பெரிய சோகம்.

 

ராகுல் காந்தி ஒரு அரைகுறை என்று தெரிந்தும், இவரை அண்டியும் தாங்கியும் நின்றிருந்தால் கட்சிக்குள் தங்கள் இடத்தை எளிதாகக் காத்துக் கொள்ளலாம், தங்களின் தனிப்பட்ட வளமைக்கு அது ஏதுவானது என்ற நினைப்பில் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் பல மூத்த தலைவர்களின் சுயநலம், அந்தக் அக்கட்சியின் இன்னொரு துர்பாக்கியம்.

 

நினைத்துப் பாருங்கள். நரேந்திர மோடி மட்டும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சராக குஜராத்தில் பதிமூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டுப் பின்னர் காங்கிரஸ் பிரதமராகவும் பத்தாண்டுகள் ஜொலித்திருந்தால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் இப்படிச் சுயநலமிகளாக இருக்க மாட்டார்கள், அவர்களில் திறமைசாலிகள் மட்டும் மேலே உயர்ந்திருப்பார்கள், இல்லையா? ஆக, ஒரு கட்சியின் உயர் தலைவன் எப்படி அமைகிறான் என்பதை வைத்துத்தான் அக் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் அமைகிறார்கள், வளர்க்கப் படுகிறார்கள்.

 

இப்போது என்னிடம் ஏதோ சொல்கிறீர்களே, என்ன சொல்கிறீர்கள்? ஓஹோ, "பாஜக-வில் வாஜ்பாய் மாதிரி ஒரு தலைவர் இருந்ததால், மோடி மாதிரி ஒருவர் குஜராத்தில் முதல்வர் ஆனார். ஒரு கட்சிக்கு சோனியா காந்தி மாதிரி ஒரு குறுமதித் தலைவர் கிடைத்தால், அவருக்கு ராகுல் காந்தி மாதிரி ஒரு வாரிசு இருக்கும்போது, அந்த வாரிசு அரைகுறையாக இருந்தாலும் கட்சிக்குள் அடுத்த தலைவராக அவர்தானே வர முடியும், மோடி மாதிரி ஒரு திறமைசாலி அந்தக் கட்சிக்குள் எப்படித் தலையெடுக்க முடியும்" என்று என்னிடம் கேட்கிறீர்களா?  உங்கள் கேள்வி தெளிவானது, நியாயமானது. உங்களை மறுத்துப் பேச நான் என்ன அரைகுறையா?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Saturday 30 March 2024

சங்கீத கலாநிதி சர்ச்சை: அபஸ்வரம் கூடுகிறது

 

-- ஆர். வி. ஆர்

 

சங்கீத கலாநிதி சர்ச்சை இப்படிப் போகிறது. கச்சேரி முடியவில்லை. அபஸ்வரம் கூடுகிறது.  

 

அபஸ்வரத்தை ஆரம்பித்தவர், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி. கூட்டியவர், அவர் சகோதரர் என். ராம். இருவரும் ‘ஹிந்து’ பத்திரிகை கம்பெனியின் முக்கியப் பங்குதாரர்கள்.

 

2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப் படும் என்று மியூசிக் அகாடமி சமீபத்தில் அறிவித்தது. விருது அவருக்குப் போவதற்கு ஆட்சேபம் செய்தவர்களில் முதன்மையானவர்கள், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள். காரணம் என்ன?

 

கர்நாடக சங்கீதத்தில் கலந்துள்ள ஹிந்துமத இறை உணர்வு மற்றும் ஆன்மிகம், அதைச் சார்ந்த பண்புகள், அதைப் போற்றிய மனிதர்கள், சாதனை செய்த முன்னோடிகள், ஆகியோரை, ஆகியவற்றை டி. எம். கிருஷ்ணா அவமதிப்பு செய்தவர், கர்நாடக இசைக் குடும்பத்தை அவர் தூற்றியவர், கர்நாடக சங்கீதக் கலைஞராக இருப்பதே வெட்கக் கேடானது என்ற எண்ணத்தைப் பரப்ப முயன்றவர், பிராமணர்களைக் களையெடுக்கப் பிரஸ்தாபித்த ஈ. வெ. ராமசாமியை அவர் உயர்த்திப் போற்றியவர், என்பது ரஞ்சனி-காயத்ரி செய்த எதிர்ப்பிற்கு அவர்கள் அளித்த விளக்கம். மற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலரும், இசை ரசிகர்கள் பலரும், அந்த எதிர்ப்பில் சேர்ந்தனர்.

 

ரஞ்சனி-காயத்ரி தங்கள் எதிர்ப்பைத் தெளிவாக, அழுத்தமாக, ஆனாலும் நாகரிகமாக, வெளிப்படுத்தினார்கள். மறுநாள் பொங்கி எழுந்த மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி, அவர்களுக்குச் சூடாக ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டார்.   

 

“உங்கள் கடிதம் வசைபாடுவதாக, அவமதிப்பதாக, மான நஷ்டம் செய்வதாக இருக்கிறது, சக கலைஞர் மீது குரூர தொனி காண்பிக்கிறது” என்று தனது பதிலில் அபஸ்வரத்தை ஆரம்பித்தார் என். முரளி. பிறகு உச்சஸ்தாயியைத் தொட்டு, சங்கீத கலாநிதி விருதுக்கு ஒருவரைத் தேர்வு செய்வது மியூசிக் அகாடமியின் “பிரிராகெடிவ்” (prerogative) என்று அவர் மார் தட்டினார்.  

 

Prerogative என்றால் “விசேஷ உரிமை, அதிகாரம் மற்றும் சிறப்புரிமை”, “பிரிட்டிஷ் அரசருக்கு உரித்தான விருப்ப அதிகாரம்” என்று மெரியம் வெப்ஸ்டர் டிக்ஷனரி அர்த்தங்கள் தருகிறது. அதாவது, “கொடுப்பது நாங்கள், கேட்பதற்கு  நீங்கள் யார்?” என்று பேச வந்தார் என். முரளி. கடிதத்தின் அடுத்த வரியிலேயே, “இந்த விருது எப்போதும் கவனமான ஆராய்வுக்குப் பின்னர் அளிக்கப் படுகிறது” என்று அவர் சொல்லி இருந்தாலும், ராஜ தொனியில் அவர் தொடங்கி இருக்கவேண்டாம். 


ரஞ்சனி-காயத்ரியின் எதிர்ப்பை மியூசிக் ஆகாடமி ஏற்காமல் இருப்பது வேறு - அதுவும் விமரிசனத்துக்கு உட்பட்டது. ஆனால் தனது கருத்தை, விளக்கத்தை, அகாடமி இன்னும் நாகரிகமாகத் தெரிவித்திருக்க வேண்டும்.

 

என். முரளியின் பதிலைத் தொடர்ந்து, அவரது சகோதரர் என். ராம் X தளத்தில்  ஒரு அறிவிப்பு செய்தார். அது எடுத்த எடுப்பிலேயே திராவிட மாடல் ஸ்டைலில் தொடங்கியது. “கண்மூடித்தனமான ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம் (bigoted and casteist coterie) டி. எம் கிருஷ்ணாவையும் மியூசிக் அகாடமியையும் குறி வைக்கிறது” என்று தொடங்கி, முரளி ஆரம்பித்த அபஸ்வரத்தை ராம் அதிகப் படுத்தினார். தான் குறிப்பிட்ட ஜாதிய உணர்வு எது, இந்த விஷயத்தில் அது ரஞ்சனி-காயத்ரியிடம் எந்த வகையில் காணப்படுகிறது என்று ராம் ஒரு துளியும் விளக்கவில்லை.

 

டி. எம். கிருஷ்ணா, என். முரளி, என். ராம்,  மற்றும் ரஞ்சனி-காயத்ரி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சங்கீத கலாநிதி விருதுக்கு டி. எம். கிருஷ்ணா ஏற்றவரல்ல என்று ரஞ்சனி-காயத்ரி கருத்து சொன்னால், அதில் என்ன ஜாதியப் பார்வை இருக்க முடியும்? என். ராம் அபாண்டமாகச் சொல்ல வருவது இதுதான்:  'டி. எம். கிருஷ்ணா குப்பத்திற்குச் சென்று அந்த மக்களுக்காகப் பாடியவர், சமூக சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமியைப் போற்றியவர். ஆனால் ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் குப்பத்து ஜனங்களிடம் ‘ஜாதிய வெறுப்புணர்வு’ கொண்டு, ஈ. வெ. ரா-வையும் ஏற்காதவர்கள். ஆகவே  சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்கு அளிக்கப்படுவதை ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் எதிர்க்கிறார்கள்'. என். ராமின் சுத்தமான அரசியல் வகைப் பிதற்றல் இது.

 

ஒரு மதத்தை, ஒரு ஜாதியை, குறிப்பிட்டு அந்த மதத்தினரை அல்லது ஜாதியினரைக் களையெடுப்பேன் என்று ஒருவர் பிரஸ்தாபிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மதத்திலோ ஜாதியிலோ உள்ள மனிதர்கள் அதை  எதிர்க்கத்தான் செய்வார்கள். அப்படி எதிர்த்தால் அவர்கள் மதவாதியா, ஜாதியவாதியா? என்ன சொல்ல வருகிறார் என். ராம்?

 

ராம் நினைத்திருந்தால் இதற்கு மேலும் ரஞ்சனி-காயத்ரியை அபாண்டமாக இழிவு செய்திருக்கலாம். ஆனால் இதற்கும் கீழாக முடியாது என்ற அளவுக்கு அவர் தரம் தாழ்ந்து போனார்.


ஒரு போக்கிரி உங்கள் முகத்தில் சேற்றை எறிந்துவிட்டு ஓடினால், நீங்கள் கௌரவம் பார்க்கும் ஒரு அமைதியானவர் என்றால், சாதாரணமாக நீங்கள் பொறுமையாகத் துடைத்துக் கொண்டு போவீர்கள். இங்கேயும் அப்படி நடக்கும் என்ற நினைப்பில் ரஞ்சனி-காயத்ரியைப் பார்த்துச் சேறு எறிவதுபோல் பேசினார் என். ராம். அந்த இருவர் மட்டுமல்ல, அவர்களைப் போல டி. எம். கிருஷ்ணாவுக்கான விருதை வேறு யார் எதிர்த்தாலும், அவர்களும் “ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம்” என்று அனைத்து எதிர்ப்பாளர்களையும் சகட்டுமேனிக்கு அற்ப சந்தோஷத்தில் பழித்தார் என். ராம்.


ராம் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ரஞ்சனி-காயத்ரியிடமிருந்து இரண்டு நாட்களில் வந்தது. அவர்கள் முரளியின் கடிதத்திற்கு மறுமொழி சொல்ல வந்து, அதில் ராம் சேறாக வீசிய வார்த்தைகளைக் குறிப்பிட்டு, “ஜாதி சமத்துவத்தை மியூசிக் அகாடமியின் நிர்வாகக் கமிட்டியில் ஆரமியுங்கள். தேவையான தீர்மானத்தைப் போடுங்கள். கொத்தாக சில கமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்யுங்கள்.” என்று சொல்லிவிட்டனர். 


வேண்டுமென்றே அரசியல்வாதி மாதிரி பிரச்சனையின் திசையைத் திருப்பியவர், அவரோடு சேர்ந்தவர்கள், இப்போது மேலும் கீழும் பார்ப்பார்கள். என்ன நடந்திருக்கிறது என்றால்: அரசியல் ஸ்டைலில் தன் மீது எறியப்பட்ட சேற்றை வழித்தெடுத்து, அது வந்த திசையில் ரஞ்சனி-காயத்ரி திருப்பி எறிந்து தங்களை ஒரு குயுக்தியான பழியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஷயம் எங்கோ போகிறது. 

 

கர்நாடக சங்கீதத்தில் ஹிந்து சமய பக்தியும் உணர்வும் மேலோங்கி இருக்கும். ‘ஹிந்து’ சமாச்சாரம் பழமையானது, தொன்மையானது. அதில் சில ஒட்டுண்ணிகள் அவ்வப்போது வரலாம், சேதமும் செய்யலாம். இதனால் பாதிப்படையும் கர்நாடக இசைக் கலைஞர்கள், பொறுமையும் கண்ணியமும் காத்துத் தங்களையும் இசை உலகையும் மீட்பார்கள் என்று நம்புவோம்.

 

இப்படி நல்லதாகத் தானே நாம்  நினைக்க முடியும்? கன்னாபின்னாவென்று நினைக்க, பேச, நாம் ஒன்றும் கிருஷ்ணா, முரளி, ராம் இல்லையே?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai