Saturday 30 September 2017

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: முஸ்லிம் சகோதராளுக்கு நமஸ்காரம்


   முஸ்லிம்  சகோதராளுக்கு  ஒண்ணு  சொல்றேன். நீங்க சங்கடப்படலாம்னு ஒரு விஷயம் இருக்கு.  அதான், முத்தலாக் விவாகரத்து கூடாது, சட்டப்படி செல்லாதுன்னு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குடுத்திருக்கே, அதைத்தான் சொல்றேன். இதைப்பத்தி உங்ககிட்ட பேசறதுக்கு எனக்கு ஒரு சங்கோஜமும் இல்லை. உங்க சௌக்கியத்தையும் சந்தோஷத்தையும் மனசுல நினைச்சுத்தான் பேசறேன்.

        எந்த மதமோ என்ன  ஜாதியோ, ஒரு ஆணும் பொண்ணும் சேர்ந்து வாழறது சௌரியம், அவசியம்னுதான் இருக்கு. சட்டம் அங்கீகரிச்ச வழில கூடினா கல்யாணம்னு பேரு. இல்லாாட்டி சேர்ந்து வாழறதுன்னு சொல்லிக்கறா. எப்படி இருந்தாலும் ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் மட்டுமான விசேஷ உறவை அமைச்சுக்கறது எல்லா மனுஷாளுக்கும் முக்கியம்னு ஆயிடுத்து.

        சரி,  ஆண்   பொண்ணுக்கு   இடைல   ஒரு   தனிப்பட்ட  உறவு முக்கியம்னா, அது சந்தோஷமாத்தான இருக்கணும்? சந்தோஷம்னா ரெண்டு பேருக்கும் சேத்துத்தான் சொல்றேன். ஒத்தருக்கு மட்டும் திருப்தி, சந்தோஷம், மத்தவருக்கு அந்த உறவுல வருத்தம்னா, வருத்தப் படறவா தனியாவே நிம்மதியா இருக்கலாம். அப்படி தனியா இருக்கணும்னாலும் அதுக்கு வேணும்கற பணம் பாதுகாப்புலாம் ஆண்களுக்கு சுலபம், பொண்களுக்கு ரொம்ப கஷ்டம். எல்லா நாட்டுலயும் எல்லா மதத்துலயும் இதைத்தான பாக்கறோம்?

   எதுக்கு சொல்றேன்னா, தான் மட்டும் சௌரியமா இருந்தா போறும், தன் கூட இருக்கறவா எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்னு ஒரு ஆணோ பொண்ணோ நினைச்சா, அவாளே முழு சந்தோஷமா இருக்க முடியாது.  குரூர மனசு உள்ளவாள விடுங்கோ. அவா சாதாரண மனுஷா கணக்குல சேத்தி இல்லை. 

       வீட்டுல   இருக்கறவாளையும்   சந்தோஷப்படுத்தி   அதுல  வர சந்தோஷம் இருக்கே, அது வரப்பிரசாதம். அதை அனுபவிச்சாதான் தெரியும். அந்த அலாதியான சந்தோஷம் உங்க எல்லார்க்கும் கிடைக்கட்டும்னுதான் இப்ப பேசிண்டிருக்கேன்.

        பரஸ்பர   சௌக்கியமும்   சந்தோஷமும்  முக்கியம்னு   ஏற்படற கணவன் மனைவி உறவு, ரெண்டு பேருக்கும் கசந்ததுன்னா அதை பிரிக்கறதுக்கு சட்டம் வழி பண்ணட்டும். இல்லை, ஒருத்தர் மத்தவருக்குப் பெரிய தப்பு பண்ணினா,  நிரபராதியா இருக்கறவா கோர்ட் மூலாமா பிரிவு வாங்கிக்கட்டும்.  இதெல்லாம் தப்பில்லை. ஆனா சொல்லுங்கோ, கல்யாணம் பண்ணிக்கும் போதே ஒருத்தர் மட்டும் "நான் எப்ப வேணும்னாலும் திடுதிப்னு 'தலாக் தலாக் தலாக்'னு சொன்னா நம்ம கல்யாணம் முறிஞ்சு போச்சுன்னு அர்த்தம். அந்த ரைட்டு எனக்கு மட்டும்தான் உண்டு, உனக்குக் கிடையாது"ன்னு சொன்னா, மத்தவா எப்படி உள்ளூற சந்தோஷப்பட முடியும்? 

        யாரோ ஒர்த்தர் ஒரு நாய்க் குட்டியை வளக்கறார்னு வச்சுக்கலாம். அவரால எப்ப முடியாம போனாலும், அல்லது அவருக்கு நாயைப் பிடிக்காம போனாலும் அவர் அதை எங்கயாவது கொண்டு விடலாம்னு நினைச்சே நாயை வளக்கலாம். இல்லைன்னாலும் அவருக்கு அந்த சக்தி உண்டு. அவருக்கு அந்த நினைப்பு இருந்தாலோ, இல்லை அதை செயலாக்கற வெறும் சக்தி மட்டும் அவர்கிட்ட இருந்தாலோ, அப்பவும் நாய் அவரை நேசிக்கும், அவர்கிட்ட வாலாட்டும், அவர் மேல அன்பா மூக்கைத் தேய்க்கும்.  ஏன்னா, அவரோட நினைப்போ சக்தியோ நாய்க்குத் தெரியாது. ஆனா மனுஷா விஷயம் வேற. 

       'நான்  எப்ப வேணும்னாலும் உன்னைத் துரத்தி விட்டு கல்யாண பந்தத்தை முறிக்கற ரைட் எனக்கு உண்டு'ன்னு சொல்லி ஒரு பொண்ணைக் கைப்பிடிச்சேள்னா அவ மனசார உங்களை எப்படி நேசிப்பா? உங்ககூட இருக்கா, குடித்தனம் பண்றாங்கறது வேற விஷயம். ஜெயில்ல இருக்கற கைதிகள்ளாம் எப்பவும் அழுதுண்டே இருக்கறதில்லை.  வெளில சுதந்திரமா இருக்கற மனுஷாளுக்கு உண்டான பிடுங்கலோ கஷ்டமோ கூட ஜெயில் கைதிகளுக்கு இல்லாம போகலாம். 'தலைக்கு மேல போயாச்சு, நம்ம கைல ஒண்ணும் இல்லை'ன்னு விரக்தில கூட கைதிகள் சமாதானப் பட்டு ஜெயில் வாசத்தை ஏத்துக்கலாம். அதுக்காக ஜெயில் வாழ்க்கையும் சுதந்திர வாழ்க்கையும் ஒண்ணுன்னு ஆகாது பாருங்கோ.

       வேற வழி இல்லைன்னு ஒருத்தரை சகிச்சுண்டு அப்பப்ப சிரிச்சா அது மணவாழ்க்கை சந்தோஷமில்ல. அது தனிப்பட்டு சுயமா சந்தோஷத்தை ஏற்படுத்திக்கறது. ரெண்டும் வேற வேற.

       இப்ப சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு அப்பறம்  தலாக் செல்லாதுன்னு ஆயிடுத்து. அதுக்கு முன்னால தலாக் விவாகரத்து அமல்ல இருந்த காலத்துல, உங்கள்ள கல்யாணம் பண்ணிண்ட எந்தப் பொண்ணும் சந்தோஷமா இருந்ததில்லைன்னு நான் சொல்லலை.  உங்க ஆண்களுக்கு தலாக் உரிமை இருந்த போதும் அவாளுக்கு மனைவியா அமைஞ்ச பொண்கள்ள நிறைய பேர் கண்டிப்பா சந்தோஷமா குடித்தனம் பண்ணிருக்கா, தொடர்ந்து அப்படியே இருக்கான்னுதான் சொல்வேன். அதுக்குக் காரணம் அந்த உரிமை உங்களுக்கு இருந்தாலும் நீங்க அதைப் பயன்படுத்தி குடும்பத்தை சின்னாபின்னமா ஆக்கி அவாளை நிர்க்கதில விட்டுடமாட்டேள்னு அவா நல்ல மனசோட நம்பினா. சில  பொண்கள் அந்த நம்பிக்கைல மோசம் போய் மணவாழ்க்கைல சம்மட்டி அடி வாங்கினதும் உண்டு.  அப்படி மோசம் பண்ணின ஆண்கள் மேல உங்கள்ளயே ஒழுங்கா இருக்கற ஆண்கள் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்க மாட்டேள். ஆனா ஒரு குடும்பத்துக்குள்ள நடக்கற அவலத்தை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவா வெளில சொல்லிக்கத் தயங்கற மாதிரி, உங்கள்ள பெருவாரியான ஆண்கள் அதைப் பத்தி வெளில கண்டிச்சு பேச மாட்டேள்.  அவ்வளவுதான். அதுக்காக ஒருத்தர் விடாம எல்ல முஸ்லிம் சகோதராளும் தலாக் ரைட்டு தனக்குக் கண்டிப்பா வேணும்னு விடாப்பிடியா இருந்தான்னு அர்த்தம் இல்லை.

      உங்கள்ள  நிறைய ஆண்கள்  அந்த  விஷயத்துல  நல்லவாளா இருக்கேள், தப்புப் பண்ணினவாளும் சட்டத்தோட பாதுகாப்புலதான் தைரியாமா தப்புப் பண்ணினா. ஆனா சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு அப்பறம் தப்புப் பண்ண தயாரா இருந்தவாளும் இப்ப அடங்கி இருப்பா. அதுனாலதான் கோர்ட் தீர்ப்பு வந்து நாப்பது நாள் ஆகியும் எந்த எதிர்ப்பும் உங்ககிட்டேர்ந்து வரலை. இது உங்களுக்குப் பெருமை. உங்க பொண்களுக்கும் மானசீக விடுதலை. அவா நன்னா இருக்கட்டும். அவாளோட சேர்ந்து நீங்களும் நன்னா இருக்கணும்.

          இதே  மாதிரி,  ஆண்களோட   பலதார உரிமைலேர்ந்தும்  கோர்ட் தீர்ப்பு மூலமா உங்க பொண்களுக்கு விடுதலை கிடைச்சா – அதாவது இந்துப் பொண்களுக்கு சட்டத்துனால கிடைச்ச மாதிரி - அவாளோட சுய மதிப்பு இன்னும் அதிகமாகும். அப்ப அவா உங்களை இன்னும் அதிகமா நேசிப்பா, உங்க மண வாழ்க்கை இன்னும் பரஸ்பரமா இனிக்கும்,  நீங்க சௌக்கியமா இருப்பேள்னு பாட்டி நினைச்சா தப்பில்லையே, சொல்லுங்கோ.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017

No comments:

Post a Comment