Wednesday 6 July 2016

சுவாதி படுகொலை, ராம்குமார் கைது, மற்றவை யாதெனில்


   நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாள் வீசி சுவாதியைக் கொலை செய்தது நான்தான் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறானாம் கைதான ராம்குமார். அவன்மீதான வழக்கை கோர்ட் சரியாக விசாரித்துத் தீர்ப்பு சொல்லட்டும். ஆனால் இதே ரீதியில் பிற அப்பாவிப் பெண்களின் உயிரிழப்புக் கதைகள் பலவும் டெலிவிஷன் மற்றும் பத்திரிகைகளில் வருகின்றன. தமிழ்நாட்டில் பிரபலமான இரண்டு பழைய வரிகளை – அதன் அர்த்தம் என்னவானாலும் – தற்காலத்தில் இப்படி மாற்றிச் சொல்லலாம்: “காதல்! காதல்! காதல்! காதல் போயின், கொலை செய்தல்! செய்தல்! செய்தல்!” ஏன் இந்த அவலம்?

   ஒரு ஆணும் பெண்ணும் ஒரு தடவையாவது பார்த்துக் கொண்ட பிறகு அவன் அவளைக் கொலை செய்தால் –  அதுவும் இருவரும் இள வயதினராக இருந்தால் – அது காதல் விவகாரமாக இருக்கவேண்டும் என்பது பலரின் ஊகமாக இருக்கிறது. அதுவும் கொலையாளியே “நான் அவளைக் காதலித்தேன். ஆனால் அவள் என் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் ஆத்திரம் அடைந்தேன்” என்று பிடிபட்டவுடன் சொல்லிவிட்டால் “ஐயோ பாவம்!” என்று தங்கள் அனுதாபத்தைக் கொலையாளியின் பக்கம் சற்றுத் திருப்பிவிடும் சினிமாக்கதை மோகிகளும் உண்டு.  காதல் இப்படியெல்லாம் செய்யத்தூண்டுமா என்ன?  இல்லை, அதுவல்ல காதல்.

    காதலின் அடையாளம் மதிப்பும் மரியாதையும். மற்றொருவரை மதிக்காமல், அவர் மீது மரியாதை கொள்ளாமல், அவர் மீது காதல் கொள்ள முடியாது. இரண்டு பேர் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்றால் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்றும் அர்த்தம். ஆண்-பெண் இடையே ஒருவருக்கு மற்றவர் மீது காதல் ஏற்பட்டு, மற்றவருக்கு அதில் நாட்டமில்லை என்று தெரிந்துவிட்டால் முதலாமவர் தன் காதல் எண்ணத்தைக் கைவிடவேண்டும்.  “மாட்டேன். அந்த நபரைத் தொடர்ந்து என் காதலை வெளிப்படுத்துவேன். அவர் என் காதலை ஏற்று என்னைத் திருமணம் செய்துகொள்ளும் வரை அவரை வற்புறுத்துவேன்.  அவர் மறுத்துக் கொண்டே இருந்தால் அவர் மீது கத்தி, அரிவாள், ஆசிட் போன்றவற்றைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டேன்” என்ற எண்ணம் கொண்ட எவருக்கும் அந்த மற்றவர் மீது மதிப்பில்லை, ஆதலால் காதலுமில்லை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

 நம்முடன் பழகும் சகமனிதர்கள் மீது நாம் எப்போது மதிப்பு வைப்போம்? அவர்களும் நம்மை மதிக்கும்போது, அல்லது அவர்களின் மதிப்பை எதிர்பார்த்து, நாம் அவர்கள் மீது மதிப்பு வைப்போம். தன்னைச் சுற்றி இருந்த பலதரப்பட்ட மனிதர்களின் பெருமதிப்பைப் பெற்றவர் மஹாத்மா காந்தி. அவரும் அந்த மற்றவர்களிடம் மதிப்பு கொண்டிருந்தார். சகமனிதர்கள் நம்மை மதிக்காமல் அலட்சியம் செய்தாலும் நாம் அவர்களை மதிக்கிறோம் என்றால் நம்மிடம் இருப்பது பயம் என்று அர்த்தம். (காந்திக்கு நேர் மாறாக, பயத்தையே விரும்பிப் பெற்று மகிழ்வுறும் தலைவர்களும் உண்டு.)   

     பரஸ்பர மதிப்பின் அவசியம் காதலுக்கும் பொருந்தும். பல ‘காதல் கொலை’ செய்திகளை ஆராய்ந்தால், தான் கொலை செய்த பெண் தன்மீது மதிப்பு வைத்திருந்தாளா என கொலைகார ஆண் எண்ணிப் பார்த்திருக்க மாட்டான். அவனுக்கும் அவள்மீது மதிப்பு என்கிற உணர்வு இருந்திருக்க முடியாது. தான் விரும்பியபடி அவள் தன்னை ஏற்கவில்லையே என்கிற எதேச்சாதிகாரக் கோபம்தான் அவனிடம் இருந்திருக்கும்.  ஆகையால், இந்த ரகக் கொலைகள் ‘காதல்’ சம்பத்தப் பட்டவை அல்ல.  இவை எப்படிப் பட்டவை என்பதை இன்னும் தெளிவாக உணர இரண்டு சம்பவங்களை உதாரணமாகப் பாருங்கள்.  கத்தியைக் காட்டி “கழட்டித்தா நகையை’’ என்று ஒரு பெண்ணை மிரட்டும் திருடன், அவள் எதிர்த்தால் அவளைக் கொல்லலாம்.  ‘காதலை’க் காட்டி ‘‘மணம் செய் என்னை” என்று ஒரு பெண்ணைத் துரத்தும் இளைஞனும், அவள் மறுத்தால் அவளைக் கொல்லலாம். இரண்டு காட்சிகளிலும், கேட்பவனுக்கு சுயலாபமும் சுயதேவையும்தான் குறிக்கோளே தவிற பெண்ணைப் பற்றி ஒரு அக்கறையுமில்லை.  

  இளவயதின் ஈர்ப்பால் மட்டும் இருவர் வாழ்க்கையில் இணைந்து, அவர்களுக்குள் பரஸ்பர மதிப்பு இல்லை என்றால் வாழ்க்கை அவர்களுக்கு இனிக்காமல் போகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.  இப்போது நம் சமுகம் பல தளங்களில் வெளிப்படையானதாக இருக்கிறது. குழந்தைகள் வளர்ந்துவிட்ட பின், எந்த நீண்டநாள் உறவுக்கும் – அதுவும் ஆண்-பெண் சம்பத்தப்பட்ட விசேஷ உறவுக்கு – பரஸ்பர மதிப்பு எற்பட வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் மெள்ள மெள்ள சொல்லிக் கொடுப்பது நல்லது. பல பெரியவர்களுக்கே இந்த உண்மை தெரியாது. அதனால் அவர்கள் வீட்டு இளைஞர்களுக்கும் இது எளிதில் புரிபடாமலே இருக்கும். எதுவானாலும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் நம்மைக் காக்க வேண்டும்.

  பொதுவாக இன்னொரு விஷயம். தனது காதல் ஆசையை ஏற்காத பெண்ணைக் கொலை செய்யும் ஆணின் அறியாமையைக் கவனியுங்கள். ‘காதல் நிராகரிப்பு’ என்ற காரணத்தால் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டுக் கடைசிவரை அவன் போலீசில் மாட்டிக் கொள்ளவில்லை என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள் (இந்தியாவில் இது அதீத கற்பனை அல்ல).  அப்போதுகூட, அப் பெண்ணின் மறைவால் அவன் ஒன்றும் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாது. அவனது வேண்டாத ஆத்திரம் ஒரு கொலையால் சற்றுத் தணிந்தது என்பதைத் தவிர அவனுக்கு ஒரு பயனும் கிடையாது. பின்னர் வரும் தலைமறைவு வாழ்க்கையும் எப்போது வேண்டுமானாலும் பிடிபட்டு தண்டனை கிடைக்கலாம் என்கிற அச்சமும் அவனை இன்னும் வதைக்கப் போகிறது. “என்னை மதிக்காத, என்னை விரும்பாத அந்தப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேனே! வேண்டாம் அவள்” என்று அவனே விலகிப் போயிருந்தால் விடுதலையும் நிம்மதியும் அவனுக்குக் கிட்டியிருக்கும். ஆக முதலில் அவன் தன் நலம் அறியாத மூடன், பின்னர் தண்டனை பெறவேண்டிய மூர்க்கன்.

   சுவாதி கொலை வழக்கிலும் கோர்ட் உண்மைக் குற்றவாளியை ஊர்ஜிதம் செய்து கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்ற அளவில் மட்டும் நாம் அந்த வழக்கைப் பற்றிச் சொல்லலாம்.

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2016

11 comments:

  1. கைக்கிளை எனப்படும் ஒருதலை காதல் சங்க காலத்திலேயே பேசப்பட்டது. இந்த கொடூரமான நிகழ்வுக்கு காதல் மட்டும் காரணமில்லை என்று தோன்றுகிறது. நானில்லை கொலையாளி என்ற நிலை எடுத்துள்ளான். பார்க்கலா,

    ReplyDelete
  2. Nothing can justify such cruelty and madness.

    ReplyDelete
  3. இதன் பெயர் காதல் இல்லை. சமுதாயத்தின் மீதான அலட்சியம் கலந்த திமிர் தான் காரணம்.

    ReplyDelete
  4. I am willing to concede for a moment that Ramkumar needs to be punished severely . But the events do not answer some questions .
    When Swathi came to know that this Ramkumar was turning violent as it happened once on the same platform a few days ago why did she not go to the police or report the matter to her parents . The father would surely have not dropped her outside the station had he heard about the earlier incident when (Ramkumar ) or some one slapped her with her mobile falling on the floor and she walking into the train unperturbed .(Reported by a professor)
    A detailed investigation needs to be done . The killer may be Ramkumar , but there is a doubt whether he did the murder at some one else's behest .The truth needs to be ravelled . The Chennai police will do it .Meenakshipuram ,the place from where Ramkumar hails is not unknown for extreme elements .
    I agree with Raghavan that this cannot be love or infatuation .The two were neither working at the same place or had any earlier connection of common interest

    ReplyDelete
  5. Stalking, murder, investigation, arrest, denial, seeking bail all looks like a present day movie. But DEATH OF SWATHI is undeniable. Is it "moving finger writing and having writ moving on"?
    SABKO SANMATHI DHEY BHAGWAN

    ReplyDelete
  6. I urge you all to watch a 80s movie called" Fatal attraction", acted by Michael Douglas. This kind of behavioural distortion happens when you long for companionship / when yo feel lonely.

    Such behaviour is not very prevalent in our country where family bonds are still fairly strong. where "Kama" is not fulfilled "Krodha" manifests; Both are sides of the same coin: Desire.

    ReplyDelete
    Replies
    1. Better word than beahvioural distortion would be Behavioural obsession.

      Delete
  7. வஞ்சித்துறை ..

    பெண்ணொருத்தி பின்னால்
    ஆணொருவன் சென்று
    மணக்க ஆசைகொண்டால்
    தவறு ஒன்றுமில்லை

    மணக்க ஆசையில்லை
    என்றவளும் சொன்னால்
    புரிந்துகொன்டு அவளை
    விட்டுச் செல்லவேண்டும்

    உனக்கவள்மே லாசை
    இருந்துவிட்டால் போதா
    அவளுக்குன் மேலாசை
    இருக்கவேண்டும் மனிதா

    விட்டவளை தனியே
    விலகிச் சென்றிடாமல்
    பார்த்திருக்கப் பலர்முன்
    புத்தி கெட்டுப்போக

    பட்டப் பகல்நேரம்
    வெட்டிக் கொலைசெய்தால்
    சட்டமுன்னை ஓர்நாள்
    தண்டித்தே தீரும்

    காதலென்று சொல்லி
    மோகவலையில் வீழ
    சோகமினி உன்னை
    வாழ்வில் வந்துதாக்கும்

    ReplyDelete
  8. Your argument is right and such type of education needs to be inculcated among the students and youth.

    ReplyDelete
  9. It is MOST UNFORTUNATE that the caste group has decided to defend the indefensible, just 'cos the accused belongs to their caste. THIS IS A VERY DANGEROUS TREND. Anything can be justified, so long as there are thousands are behind the offender. Truth can be twisted and the blame can conveniently be shifted on the murdered. HOW LOW CAN A SOCIETY OR A CASTE GROUP GO? Such behavior can result in opposite reactions not necessarily equal (Long live Newton). Social groups, NGOs apart from Govt should take up such issues and warn (apart from educating - can one wake up a non-sleeping person?) such groups.

    ReplyDelete