Wednesday 9 December 2015

மழை, வெள்ளம், மனிதர்கள்


சென்னை வெள்ளம் என்ன செய்தது?

அனைவரையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ புரட்டிவிட்டது பேய் மழையும் பெரு வெள்ளமும்.  மனிதர்களின் நிஜமான அவதியும் பரிதவிப்பும் சமூகத்தில் மற்ற மனிதர்களுக்கு நேரடியாகவோ பத்திரிகை டிவி மூலமாகவோ தெரியும்போது அந்த மற்றவர்கள் எப்படி சங்கடப்படுவார்கள் என்பதை சென்னை சொல்லி விட்டது. கடலூரும் காட்டிவிட்டது.

ஒன்று கவனித்தீர்களா? அருகில் நடந்ததாலும் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததாலும் வெள்ள பாதிப்பு இல்லாதவர்கள் பலரும் – நகருக்கு வெளியில் வசிப்பவர்களும் – தாங்கள் குற்றம் செய்த மாதிரி மன வருத்தம் அடைகிறார்கள்.  அதற்கு நிவாரணமாக இன்னல் பட்டவர்களை நினைத்து இரங்குகிறார்கள், மற்றும் தங்களால் முடிந்த உதவிகள் செய்கிறார்கள்.

   பணம் கொடுக்க முடிந்தவர்கள் கொடுக்கிறார்கள். நல்லது. நேரத்தையும் உடல் உழைப்பையும் தந்து உதவ பலர் வருகிறார்கள். இன்னும் நல்லது.  நிவாரணப் பணிகள் நடக்கும் போது தடுக்கவும் தட்டிச் செல்லவும் வில்லன்கள் பல வழிகளில் செயல்படுவது பெரும் வியப்பல்ல. தமிழகத்தில் அவர்கள் எங்கும் வியாபித்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால் உதவி செய்ய எத்தனிக்கும் மனங்களும் கரங்களும் நம்மைச் சுற்றி இந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம்.

தமிழ் நாட்டின் பெரும் துயர் துடைக்க இவ்வளவு பெரிய சேனை மனதளவிலும் செயல் வடிவிலும் இருக்கிறது என்றால் நம் பொது வாழ்வில் மட்டும் ஏன் இப்படி ஒரு சீரழிவு? இதற்கு ஒரு முக்கியமான காரணம் தோன்றுகிறது. அதாவது, ஊரில் வெள்ளம் எற்படுத்திய சேதமும் சாவும் நம் அனைவருக்கும் தெரிகிறது, புரிகிறது. இவற்றை யாரும் மக்களிடமிருந்து மறைக்க முடியாது. கொஞ்சத்தை மறைத்தாலும் தானாகத் தெரிவது ஏராளம். நம்மைச் சுற்றிய அவலம் சுரீர் என்று நமக்கு உறைக்கும் போது நம்மில் நல்ல மனம் உள்ளவர்கள் அதைத் தாங்க முடியாமல் அதைக் களைய நினைக்கிறார்கள், வருகிறார்கள். இவர்கள் தமிழகத்தின் சொத்து. ஆனால் பொது வாழ்வில் நடக்கும் தில்லு முல்லுகளும் கொள்ளைகளும் இவர்களை நசுக்கினாலும் – அவற்றால் இவர்களே நேரடியாக பாதிக்கப் பட்டாலும் – அந்த ஊழல் வெள்ளத்தையும், அதன் வேகத்தையும் அதை எற்படுத்தியவர்களையும் இவர்களால் சரியாக அடையாளம் காண முடிவதில்லை.   அதனால்தான் அவற்றுக்கு நிவாரணம் தேவை என்று கூடத் தோன்றாமல் இந்த விஷயத்தில் சொத்தையாக இருக்கிறார்கள். பேச்சுக்கு மயங்கி இலவசங்களுக்கு இளகி புரட்டி எடுக்கப் படுகிறார்கள். இவர்களுக்கு – அதாவது இவர்களின் சந்ததிகளுக்கு – நல்ல கல்வி கிடைத்து அது அவர்களுக்கு சேனையாக இருந்து அவர்களை பொது வாழ்வுப் பிசாசுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

தமிழக அரசுக்கு தற்போது மிகப் பெரிய சவாலான நாட்கள். கவலையான காலமும் கூட.  சென்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்ட எதிர்க் கட்சிகள் எல்லாம் “நல்ல வேளை. நாம் இப்போது ஆட்சியில் இல்லை” என்று மகிழ்வார்கள். ’தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பத்து நாட்களுக்கு முன்னதாக இந்த அரசு ஆரம்பித்து மழை-வெள்ளச் சேதத்தைப் பெருமளவு குறைத்திருக்கலாம்’ என்கிற விமரிசனமும் வருகிறது. வேண்டியதைச் செய்யாமல் முன்பு ஒரு அரசாங்கம் மாநிலத்தை இருட்டில் தள்ளியது என்றால் மற்றொரு அரசாங்கம் தலைநகரை வெள்ளத்தில் முக்கியதோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

2 comments:

  1. உண்மையான, மனத்தில் பட்ட கருத்துக்களை, எண்ணியதை எண்ணியவாறு பகிர்நந்துகொண்டதற்கு வாழ்த்துகள். சமுதாயம் எப்பொழுது சீரடையும்? எல்லாப்புகழும் இறைவனுக்கே!
    என் வி சுப்பராமன்

    ReplyDelete
  2. The malady caused by the floods can be overcome with financial aid and rehabilitation. In fact in the North, in the states of Orissa, W Bengal and Gujarat floods of a much higher magnitude has struck many times and learning from those the governments have taken measures to strengthen the defence mechanism against such catastrophes. However in the case of Tamilnadu and Chennai both the government and the public were caught napping as no one expected so much rains in just a couple of days. There is no system to forewarn such occurrences and there has been gross mismanagement of release of water from the reservoirs. Be it as it may, is the government keen on putting in place a mechanism to prevent such tragedies in future? I think not. This government will feel shaky to face the public in the next election as the other parties will use the video clippings of the flood to campaign against this party. Hence they may not be too keen to spend more efforts in disaster management as they may feel that it would be the task for the next government to take care whomsoever it be.Coming to the second part, cleaning the Coovum is easier than cleaning the system.

    ReplyDelete